அது போன வாரம், இது இந்த வாரம்

ஏன்னா நம்ம பையனுக்கு H1B ஸ்டாம்பிங் ஆயிடுச்சி, நெக்ஸ்ட் வீக் கலிஃபோர்னியாக்கு கிளம்பனுமாம்

அதெல்லாம் போகக்கூடாது, ஸ்டேட்ஸ்ம் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்

ஏன்னா போகக்கூடாதுன்றேள்?

பிராமணாள்க்குனு சில சம்பிரதாயம் இருக்கோன்னா? சாஸ்த்திரப்படி சுத்த பிராமணாள் கடல் தாண்டக்கூடாது

போன வீக் கூட பையன் ஸ்டேட்ஸ் போறான்னு சுந்தர் மாமா கிட்ட சொல்லிண்டிருந்தேளே, அப்போ நோக்கு தெரியலையா சாஸ்த்திரமும் சம்பிரதாயமும்

அது போன வாரம், இது இந்த வாரம்.

------------------------

பிள்ளைவாள் உங்க பிள்ளையாண்டான் மெடிக்கல் கவுன்சிலிங் போனானே டாக்டர் சீட் கிடைச்சிடுத்தோன்னா?

டாக்டர் சீட் கிடைச்சிடுச்சிங்க சாமி, ஆனா நான் தான் அவனை டாக்டருக்கு படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்!

என்னாச்சி பிள்ளைவாள் உம்ம கனவே உம்ம பையனை டாக்டராக்கி பாக்குறதுனு சொல்லிண்டிருந்தேள், இப்போ வேண்டாம்கறேளே?

டாக்டர்லாம் மருத்துவர் சாதியாளுங்க அதான்க அம்பட்டன் பாக்குற தொழிலு, அது எங்க சாதி தொழில் இல்லை.

நோக்கு உம்ம சாதி என்ன தொழில் பார்க்கனும்னு, போன வாரம் கவுன்சிலிங் போனேளே அப்போ தெரியலையா?

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------

பிஷ்சை, பிஷ்சை

ஏதோ ராப்பிச்சை போலிருக்கு, போய் பாரு

அய்யோ அய்யோ ஈஸ்வரா, பெரியவா, சின்னவா நீங்க ஏன் பிஷ்சை எடுக்குறேள்

முற்றும் துறந்த(?!) எங்களுக்குனு சில சாஸ்த்திரம், சம்பிரதாயம் இருக்கு, நாங்க சம்பிரதாயப்படி பிஷ்சை எடுத்து தான் சாப்பிடனும்

போன வாரம் கூட மடத்துக்கு வந்திருந்தோமே அப்போ அப்படி இல்லையே

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------

ஏங்க, தரகர் வந்திருந்தாரு ஒரு வரன் கொண்டு வந்தாரு, பையன் வாத்தியாரா இருக்காராம்

இனிமே நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்க வேண்டாம்

ஏங்க, என்னாச்சி திடீர்னு ?

புருசன் செத்த பொண்ணுக்குலாம் ரெண்டாம் கல்யாணம் பண்ண கூடாது

என்னங்க இது தலையில் கல்லை தூக்கி போடுறிங்க

ஆமாம், புருசன் செத்ததுக்கப்புறம் பொண்ணுங்க வாழ்க்கை எப்படி இருக்கனும்னு ஒரு மரபு இருக்கு அதை மீறக் கூடது

போன வாரம் கூட நீங்க தரகர்கிட்ட வரன் பார்க்க சொன்னீங்களே, அப்போ தெரியலையா இந்த மரபு

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------------------------------------


சொடலை பள்ளி கூடம் கெளம்பலையா

இல்லப்பா, இன்னியிலிருந்து நானும் உன் கூடவே தோட்டி வேலைக்கு வர்ரேன்

ஏன்டா கோட்டிப்பயலே, போன வாரம் வரைக்கு ஒளுங்காத்தானடா வாத்தியார் வேலைக்கு போயிகினு இருந்த

நம்ம சாதிக்குனு ஒரு தொழில் இருக்கே, அது தான் நாம செய்யனும், அதுதான் நமக்கு விதி

ஏன்டா போன வாரம் வரை வேலைக்கு போனயேடா

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------------

என்னடா அதிசயமா இருக்கு சேரிக்காரனுங்க அவனுங்க பொணத்தை நம்ம மயான பாதையில தூக்கிட்டு போகாம சுத்து பாதையில் போறானுங்க

தெரியலையே பண்னை, ஊர் கொளத்துல தண்ணி எடுக்க எவனும் வரலை, ஊருல மேல் சட்டை போடாம, காலுக்கு செருப்பு போடாம நடக்குறானுங்க

இப்பதான் அவனுங்க ஐவேஸ் புரிஞ்சிதோ என்னமோ

போனவாரம் மூக்காயி செத்தப்ப கூட இப்பிடி இல்லியேடா

அது போன வாரம், இது இந்த வாரம்.

--------------------------

டேய் ராசய்யை கன்னம் வக்கிறது தெரியுமா ஒனக்கு, நாம நாளைக்கு தொழிலுக்கு போகனும்

மாமா நீ ஏட்டு தானே, கள்ளன் மாதிரி கன்னம் வக்கிறதை பேசுற என்ன போலிஸ் வேலையை விட்டாச்சா?

ஆமாம் மச்சான் போலிஸ் வேலையை உட்டுட்டேன், நமக்குனு என்ன தொழில் விதிச்சிருக்கோ அதை தான் செய்யனும், அது தான் மரபு

ஏன் மாமா கோட்டி புடிச்சிடுச்சா உனக்கு, போன வாரம் பார்த்தப்ப கூட நல்லாத்தானே இருந்த

அது போன வாரம், இது இந்த வாரம்

----------------------------


இப்படி ஊருல போன வாரத்துக்கும் இந்த வாரத்துக்கும் மக்கள் கிட்ட ஏற்பட்ட மாற்றம் குறித்து படு கோபமாகி நம்ம குவார்ட்டர் கோவிந்தன் அறிவுப்பசி அண்ணாசாமியிடம் கொந்தளித்தான்

யோவ் அறிவுப்பசி அண்ணாசாமி, இன்னாயா அது எல்லாரும் இப்பிடி மாறிட்டானுங்கோ, கேட்டா சம்பிரதாயங்குறானுங்கோ, மரபுங்கறானுங்கோ ஒரு எளவும் புரியலை

குவாட்டரு, இப்போ தான் இந்த மக்களுக்கு புத்தி வந்திருக்குனு சந்தோசப்படுவியா? அவங்கவங்களுக்கு என்ன விதிச்சதோ அது அதுப்படி நடக்கனும், அது தான் மரபு

என்னயா அறிவுப்பசி திடீர்னு இந்த வாரம் நீ இப்பிடி பேசுற?

ஒன்னொன்னுக்கும் ஒரு மரபு இருக்கோல்லியா? சிதம்பரம் கோவில்ல சிற்றம்பலத்துல தமிழ்ல பாடக்கூடாது, சம்ஸ்கிரதத்துல தான் பாடனும்னு மரபு இருக்கோ, அதை மீறி அந்த ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்திலதான் தமிழ்ல பாடுவன்னா அதை கேட்டு நடராசர் காது அறுந்து விழுந்துடாதா? அதுவும் இந்த ஆறுமுக சாமியாரு, தீஷ்சிதரா? அவங்கவங்க என்னென்ன செய்யனும் பொறப்புலயே தீர்மானிச்சிருக்கு, ஆனாலும் இந்த ஆறுமுகசாமி கோயிலை தீட்டாக்க முயற்சி செய்றார், சிவ சிவா என்ன அநியாயம் இது, ஆனா இப்போ இருக்குற மனுசாள்ளாம் அதை புரிஞ்சிக்கிட்டாங்க, அதான் மரபை மீறாம இருக்கனும்னு நியாயத்தை பேசுறாங்க.

குவார்ட்டர் கோவிந்தன் தண்ணி அடிக்காமலே மயங்கி விழுந்துகிடக்காராம், யாராவது பார்த்திங்கனா கொஞ்சம் குவார்ட்டர் வாங்கிகொடுத்து தெளியவைங்க....

அரசியலில் சாதி பாகம்-2

அரசியலில் சாதி தொடர்பான எனது முந்தைய பதிவில் பகிர்ந்து கொண்டதின் தொடர்ச்சி இந்த பதிவில்

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்த முடிந்த சனநாயக நாட்டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், என்ற மூன்று ஊர்களில் தேர்தல் நடத்த முடியவில்லை, மேலவளவு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரானதற்கு முருகேசன் கொடுத்தது தன் தலையோடு சேர்த்து மேலும் ஐந்து உயிர்கள், கண்டதேவியையும் அங்குள்ள தேரும் தாழ்த்தப்பட்ட மக்களால் இழுக்க முடியவில்லை இதற்கெல்லாம் ஆணி வேர் என்ன? காரணம் என்ன என்றால் சட்டென்று சொல்வோம் சாதியென்று ஆனால் இந்த ஊர்களை நம்மில் பலர் முன் பின் பார்த்தில்லை, முன் பின் பார்த்திராத நேரடியாக நம் தொடர்பில்லாத ஊர்களில் நடக்கும் கொடுமைகளையும் சாதியின் தாக்கத்தையும் உணர்ந்த நம்மால், நம்மிடத்தில் நம் பெயரில் ஆரம்பித்து,

சாப்பிடும் உணவு முறை, பண்டிகைகள், கடவுள் வழிபாடு, தொழில், உறவுகள், திருமணம், உடை உடுத்தும் முறை, சாவுக்கு சாங்கியம் செய்வது என பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனையிலும் நம்மிடம் இருக்கும் சாதியின் தாக்கத்தை நாம் அறியாமல் சாதியின் இருப்பிற்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் கை காண்பிப்பது, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள ஆணாதிக்கத்தை அறியாமல் ஆணாதிக்கத்தை யாருடைய சட்டைப்பையிலோ தேடுவது போலத்தான், சாதியின் இருப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் ஒவ்வொருவரும் காரணம் ஒரே வித்தியாசம் சிலரின் பங்களிப்பு அதிகம், சிலர் பங்களிப்பு குறைவு சிலரின் பங்களிப்பு மிக மிக குறைவுஅவ்வளவே.

(சென்ற பதிவில் நான் எழுதியிருந்த பெயர் மற்றும் உணவுப் பழக்கங்கள் சாதி வழியாக தீர்மாணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து பல பின்னூட்டங்கள் வந்தன, ஆனால் இன்று சிதம்பரம் நடராசர் கோவில் பிரச்சினை கூட தயிர்சாதம் VS கறிசோறு என்று விவாதிக்கப்படுகின்றது.)

காஷ்மீரிலிருந்து கர்நாடகம் வரை பல இடங்களில் வலுவாக இருக்கும் ஆயுத போராட்ட குழுக்கள் தமிழகத்தில் மட்டும் தற்போது வலுவாக இல்லாமைக்கு காரணம் என்ன என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் கிடைக்கும், மிக மிக முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஓரளவிற்காவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்த பட்ட மக்களின் பங்களிப்பு அரசியலில் இருப்பது, இரண்டாவது காரணம் பல இளைஞர் சக்திகள் திரைப்படங்களிலும் அரிதாரம் பூசிய திரைப்பட நடிகர்கள் பின்னாலும் விழுந்து கிடப்பது, இது உடல் வலியை மறக்க கஞ்சா குடித்து மயக்கத்தில் கிடப்பது போன்றது.

மாலன் அவர்களின் எழுத்திலிருந்து

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று

2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்தமிழ் நாடு போராட்டத்தில் இறங்கி பின் ஆட்சியையும் கைப்பற்றியது இந்தி மேலாதிக்கத்தை தமிழகத்திலிருந்து திமுக விரட்டியடித்தது, ஆனாலும் 70களின் மத்தியில் புலவர் கலியபெருமாள் தலைமையில் வர்கப்போராட்ட சித்தாந்தத்தில் ஆயுத போராட்டம் (CPI-ML இந்திய கம்யூனிஸ்ட்-மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) உருவானது, கம்யூனிஸ்ட்களின் தேசிய சித்தாந்தம் தமிழக நலன்களை பலி கொடுப்பதாக கருதினார், பின்னர் தமிழக நலன்களின் புறக்கணிப்பை முன்னிறுத்திய புலவர் கலியபெருமாளுக்கும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இந்திய தலைமைக்கும் ஏற்பட்ட பிணக்கினால் இந்த இயக்கத்திலிருந்து தனி தமிழ்நாடு கோரிக்கையுடன் புலவர் கலியபெருமாள் வெளியேறினார், தமிழரசன் தீவிரவாத குழு என அரசால் தடை செய்யப்பட்டுள்ள தமிழர் விடுதலைப்படையை ஆரம்பித்து தனி தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தார், தனி தமிழ்நாடு கோரிக்கை தான் என்றாலும் தமிழரசன் உருவாக்க நினைத்ததாக அறியப்பட்டது சோசலிச தமிழகம், தமிழீழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான போது புளோட்,ஈரோஸ் இயக்கங்களும் ஏன் விடுதலைப்புலிகளின் இயக்கமும் கூட சாதி வேறுபாடுகளற்ற சோசலிச தனித்தமிழீழம் தான் கொள்கையாக இருந்தது என்பதை சில பத்திரிக்கைகளின் மூலம் அறிந்துள்ளோம்.

தமிழர் விடுதலைப்படையில் இருந்தவர்களை நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருந்தனர், இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அவர்களில் பெரும்பான்மையினராக இருந்தது வன்னியர்களும், தலித்களும், இவர்கள் தான் மத்திய அரசை எதிர்த்தும் காவல்நிலையங்களை தாக்கிய போதும் பெரும் நிலக்கிழார்களையும், சாதிவெறி காரணிகளையும் எதிர்த்து ஆயுதப்போராட்டங்கள் நடத்தினர் அந்த நேரத்தில் திராவிட இயக்கங்களிலும், காங்கிரஸ் இயக்கத்திலும் அந்த வட்டாரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இவ்விரு இன மக்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பது என்ற அளவில் மட்டுமே இருந்தது, மற்றபடி அரசியல், அதிகாரங்கள் சில பணக்கார உயர் சாதியினரிடமும் சில பணக்கார வன்னிய பண்ணையார்களிடமும் மட்டுமே இருந்தது, ஒரு சாதாரண விடயத்திற்கு, சான்றிதழுக்கு கையெழுத்து வாங்க இவர்களை பார்க்க வேண்டுமென்றாலும் கூட கிட்டத்தட்ட அடிமை மாதிரி கைகட்டி வாய்பொத்தி தான் கேட்க வேண்டிய சூழல், இது ஏற்படுத்திய கோபம், இந்த மக்களுக்கான அரசியல் வெற்றிடம் இவர்களை தமிழர் விடுதலைப்படையை நோக்கி ஈர்த்தது.

1964ம் ஆண்டு அமெரிக்கன் பீஸ் கேர் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடி கூறியது

pockets of poverty any where thretens proesperty everywhere

எந்த ஒரு சமூகம் வறுமையிலும் ஏழ்மையிலும் கிடந்தாலும் அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.

இந்த காரணி தான் அந்த அடித்தட்டு மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு இழுத்து சென்றது. அன்று தமிழர் விடுதலைப்படை தனித்தமிழ்நாடு கேட்டதற்கும் அதன் ஆயுத போராட்டத்திற்கு கூறிய காரணங்கள் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் இன்றும் அப்படியே இருந்தாலும் இன்று அந்த ஆயுதகுழுக்கள் வலுவிழந்ததற்கு காரணத்தை யோசித்தால் சில விடயங்கள் புரியும்.

தமிழர் விடுதலைப்படை அரசின் இரும்பு நடவடிக்கைகளினால் வலுவிழந்தது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர் விடுதலைப்படையின் தலைவர் தமிழரசன் கொல்லப்பட்டாலும் அதன் பிறகு தொடர்ந்து தெய்வசிகாமனி என்ற லெனின் தலைமையில் தமிழரசனையும் விட வீரியமாக செயல்பட்டது, அவரும் வெடிகுண்டு வெடித்து இறந்தபின் சில ஆண்டுகளில் அந்த இயக்கம் பிளவுண்டாலும் அதன் மொத்த செயல்பாடுகளும் வீரியம் இழந்ததற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தை இயக்கமும்.

அடித்தட்டு மக்களுக்கான சமூக, அரசியல் வெற்றிடத்தினால் தமிழர் விடுதலைப்படையால் ஈர்க்கப்பட்டவர்களை பாட்டளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் ஈர்த்தது, ஆயுதப்போராட்டமே அடித்தட்டு மக்களின் அரசியலுக்காக என்று தமிழர் விடுதலலப்படையினால் கூறப்பட்டது, ஆனால் அதற்கான அந்த ஆயுதப்போராட்டம் ஆபத்தானது, தற்போதுள்ள நிலையில் ஆயுதப்போராட்டம் வெற்றி பெறாது, நிச்சயம் பலி வாங்கிவிடும், இந்திய சமூகத்தில் வர்க்கப்போராட்டமும் கூட சாதியால் ஆனது எனவே வன்னிய சாதி மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் அவர்களின் அரசியல், சமூக வெற்றிடத்தை நிரப்ப முனைந்தது, மேலும் வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் பெற்ற வெற்றியும் அதே சமயத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களும், அதில் அரசாங்கத்தின் பங்கும்(இதைப் பற்றி பிறகு விரிவாக பேசலாம்) இந்த மக்களை மேலும் கட்சிகளுடனான பிணைப்பை இறுக்கியது.

பாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கங்களில் இணைத்து கொள்வது ஆயுத போராட்ட குழுக்களில் இணைத்துகொள்வதை விட பாதுகாப்பானது அதே சமயம் இந்த கட்சிகளினால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் ஆயுத குழுவினால் அடையும் பயனைவிட மிக அதிகம், வாக்கு அரசியலுக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்ற அனைத்து கட்சிகளும் தொடத்தயங்கிய பல இடங்களில் பல தேவைகளில் இந்த கட்சிகள் அதிரடியாக போராடியது, அதாவது ஆயுத போராட்ட குழுக்களிடம் இருக்கும் ஆக்ரோசத்தோடும் ஆனால் அதே சமயம் ஆயுதகுழுக்களினால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் பல இடங்களில் பல தேவைகளுக்காக போராடியது, ஆனால் இந்த ஆக்ரோசமே இந்த இயக்கங்களை வன்முறை இயக்கங்களை போல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொது மக்களிடம் சென்று சேர்க்கும் காரியத்தை செவ்வென செய்தன.

வட மாவட்டங்களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த முதலியார்(உடையார்), ரெட்டியார் மற்றும் சில பணக்கார படையாட்சிகளிடம்(வன்னியர்) இருந்த பண்ணையார் அரசியல் சட்டென்று அடித்தட்டு மக்களிடம் வந்தது, அம்பாசிடர் காரிலிருந்து இறங்காமலே ஓரிரு குடும்பங்களிடம் பேசி மொத்த ஊரையும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்து கொண்டிருந்த பண்ணையார் அரசியல் பாட்டாளி மக்கள் கட்சியாலும், விடுதலை சிறுத்தைகளினாலும் முடிவுக்கு வந்தது, காரிலே வந்து காரிலே சென்றவர்களை மட்டும் கொண்டிருந்த அரசியல் அடித்தட்டு ஆட்களுக்கும் வந்து சேர்ந்தது.

வன்னிய, தலித் மக்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன, ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது, இது மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தினல் நடந்தது, இதற்கு காரணம் பாமக, விடுதலை சிறுத்தைகள் இவர்களின் இந்த சாதி அரசியலினால் திமுக,அதிமுக, காங்கிரஸ் என ஆரம்பித்து அத்தனை கட்சிகளும் இதே அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்ன கொடுமை இது வன்னிய தொகுதி, தலித் தொகுதி என அடையாளப்படுத்த படுதல் ஒரு வளர்ச்சியா என்பவர்கள் ஒரு நிமிடம் பொறுமை காக்கவும், வன்னியசாதி என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு பெரும்பாலும் சென்றடையாத, வெட்டி சாதிப் பெருமை பேசும் ஒரு வளர்ச்சியடையா சமூகம் என்றும் தலித் என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு இல்லாமல், மனிதனை மனிதாக மதிக்கப்படும் ஒரு மரியாதைக்கூட பெற முடியாத சமூகம் என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த அடையாளம் முற்போக்குத்தனமானதா? அல்லது பிற்போக்குத்தனமானதா என்று.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை, வளர்ச்சியடையா சமூகங்களை அவர்களின் அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் தோல்வியடைந்தால், அவர்களுக்கு அரசிலும் அரசாங்கத்திலும் இடமில்லையென்றால் அந்த மக்களும் சேர்ந்தே தோல்வியடைகின்றனர், ஜான்.எஃப்.கென்னடி சொன்னது போல அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.

இது தொடர்பாக மேலும் பேசுவேன்...

குறிப்பு
(மீள்வாசிப்பில் கட்டுரையின் பேசு பொருளில் மாற்றம் செய்யாமல் நில இடங்களில் நடையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

கருத்துகளம் - விதிமுறைகள்

விடாதுகருப்புவிற்கு இந்த பதிவில் நான் தெரிவித்த கண்டனமும் அதை தொடர்ந்து அசுரன் எழுதிய பதிவில் நான் அளித்த பின்னூட்டம் இங்கே பதிவாக.

கருத்துகளம் என்பது போர்களமல்ல எதிராளிக்கு வலிக்க வேண்டுமென்பதற்கோ எதிராளி சாக வேண்டுமென்பதற்கோ, உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளது, உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும் போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)

பண்பற்ற, கேவலமான கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எந்த நியாயத்தையும் யாருக்கும் எடுத்து செல்லாது, அவைகள் காயத்தை மட்டுமே உண்டாக்கும், வலியை மட்டுமே உண்டாக்கும், அது அந்த வார்த்தையை பிரயோகித்தவரின் தோல்விதான், நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் தான் எனது கண்டனத்தை விடாது கறுப்புவிற்கு தெரிவித்தேன்.

இது ஒரு விதமான விளையாட்டு, இங்கே விளையாட்டின் விதிகள் வினோதமானது, நேரடியாக இந்த அனானி நீங்களா அந்த பெயரில் எழுதுபவர் நீங்களா என்று கேட்பதுமா பெரும் பாவம், ஆனால் அதையே நேரடியாக சொல்லாமல் சுச்சு என்ற பெயரில் உள்ள பின்னூட்டத்தை படித்தால் உங்கள் ஞாபகம் வருகிறதே என்றும் உங்களை பார்த்தால் அவரை பார்க்க வேண்டாம், அவரை பார்த்தால் உங்களை பார்க்க வேண்டாம் என நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதையே கேட்கலாம் இது ஆட்ட விதிகளுக்குட்பட்டது, நேரடியாக கேட்பது ஆட்டவிதிகளுக்கு முரணானது.

நக்கல் நையாண்டி எனவும் பெயரை குறிப்பிடாமல் லேசாக எழுத்துகளை மாற்றி எழுதலாம் அதெல்லாம் அங்கத்தில் வந்துவிடும், அதையே நேரடியாக பெயர் கூறி எழுதினால் ஆட்டவிதிகளுக்கு முரண், இது மாதிரியான ஒரு வினோதமான விதிமுறைகள் உள்ள ஆட்டகளம் இது. ஏனெனில் முதலில் ஆட ஆரம்பித்தவர்கள் உருவாக்கிய விதிகள் இவை.

பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது அல்ல, ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொது மதிப்பீட்டிற்கு எதிரான நிலை எடுத்து பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே பொதுமதிப்பீட்டில் தவறாக எடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை பேசும்போது அது சென்று செல்ல வேண்டிய ஆட்கள்(targetted audience) யாரெனில் அது நடுநிலையாட்கள், இவர்களுக்கு மாற்று கருத்துகள் வெகுசன ஊடகங்களினால் எடுத்து வைக்கப்பட்டதில்லை, அப்படி செல்லும்போது விழும் வார்த்தை பிழறல்களினால் சொல்ல வந்தது targetted audineceஐ சென்று சேராமலே போய் விடும், targetted audience கண்டிப்பாக நடுநிலை போர்வையில் உள்ளவர்கள் அல்ல.

திட்டு வாங்கியவர்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் சாக்கில்(கண்டனம் தெரிவிப்பது நிச்சயம் தவறில்லை) போகிற போக்கில் மற்றவர்களையும் சேர்த்தே கத்தியால் சொருகி விட்டு செல்வார்கள், அவர்களுக்கான தேவையும் அது தான், ஏனெனில் பண்பற்ற வார்த்தைகளில் திட்டுபவர்கள் அதற்கான விலையை தருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் பிறகு அவர்களின் ஆக்கங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எத்தனை குறைவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே, ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் போகிற போக்கில் மற்றவர்களை சொருக முடியும், நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சிலரின் மீது, சில குழுவின் மீது, சில பிம்பங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் மாற்று கருத்துகளை எடுத்து செல்பவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடியும், பொதுவாக ஒரு சாதியை கெட்ட வார்த்தைகள் திட்டினால் ஆட்டவிதிகளுக்கு முரண் என கண்டிக்கும் நம்மால் இப்படியெல்லாம் பண்பற்ற வார்த்தைகள் பேசுவதற்கு காரணமே திரா'விட'ம் என்று பொதுவாக பேசுவதை கண்டிக்க இயலாது ஏனெனில் இது ஆட்டவிதிகளுக்குட்பட்டது, அங்கேயும் பொதுமை படுத்தல், இங்கேயும் பொதுமை படுத்தல் தான், ஒரே வேறு பாடு அங்கே பண்பற்ற வார்த்தை, இங்கே நாகரீக நஞ்சில் தோய்த்த வார்த்தைகள்.


இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் மாற்று கருத்துகளை முன்னெடுத்து செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொன்றும் திரிக்கப்படும், அய்யோ என ஓலமிடப்படும் முத்து தமிழினி வார்த்தைகளில் சொல்வதென்றால் கீழே விழுந்து கை கால்களை உதைத்துக்கொண்டு அழுவார்கள், அதை சட்டென்று பார்க்கும் போது என்னமோ அவர்கள் பாதிக்கப்பட்டது போன்றதாகவுமான ஒரு படக்காட்சி உருவாக்க முயலுவார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமை, கொஞ்சம் பொறுமையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் அவர்களின் நடுநிலைமை பல்லிளிக்கும் ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும் மேலும் இப்படியான முன்னெடுப்பாளர்களின் ஒரு ஒரு வார்த்தையும் ஆராயப்படும், ஆதலால் மிக கவனமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் பலரும் காத்திருப்பது இந்த முன்னெடுப்பாளர்களை போட்டு தள்ள, இதில் மிகவும் சிக்கலானதே நடுநிலை போர்வையில் இருப்பவர்களால் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆணாதிக்கத்திலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முயல்பவர்கள் ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் எத்தேச்சையாக வந்து விழும் "மீசை வைச்ச ஆம்பிளை யாரும் எதிர்க்கவில்லை" என்ற வார்த்தையை நடுநிலையாளர் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்கப்படாமல் அதை ஆணாதிக்க வெறியாக சித்தரித்து அதை தொடர்ந்து பல திரிப்புகள் புனைவுகள் செய்து கை கால் உதைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்யும் போது கண்டிப்பாக அது அந்த வார்த்தைகளுக்கு அல்ல அது வேறு முன்னெடுப்புகளுக்கு போட முனையும் தடை என்பது புலனாகும். ஆனால் அது எல்லோருக்கும் புலப்பட நேரமெடுக்கும் அது வரை ஆட்டவிதிகளுக்குட்பட்டு பொறுமை காக்க வேண்டும், இதில் மாபெரும் வேடிக்கையென்னவென்றால் சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியே வந்து அவர்களின் நடுநிலை பல்லிளிப்பது தான், மடியில் உள்ள பூனைக்குட்டி நிச்சயம் ஒரு நாள் வெளிவரும் அது வரை இந்த ஆட்டத்தில் பொறுமைதான் ஒரே விதி ஏற்கனவே சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியில் குதித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை, இனி எங்கிருந்தாவது பூனைக்குட்டி குதித்தாலும் பெரிய அதிர்ச்சியெல்லாம் இருக்காது, ஒரு சிறிய வியப்பு மட்டுமே தோன்றும்.

உலகக்கால்பந்து கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முக்கிய வீரர் ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜிடேன் திடீரென எதிரணியினரை முட்டி மோதினார், விளைவு சிவப்பட்டை வாங்கி வெளியேறினார், முட்டுவதற்கு காரணம் ஜிடேனை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசியது, ஜிடேன் முட்ட வேண்டுமென்று பேசியது தான் அது ஆனாலும் கால்பந்து விதிகளின் படி முட்டியது மட்டுமே விதிகளுக்கு முரணானது ஜிடேனை கோப மூட்டி முட்டு வாங்கியதால் வென்றது யார்? இதற்காகத்தானே ஜிடேனை கோபமூட்டியது, முட்டுவதற்கு காரணங்கள் இருந்தாலும் முட்டியதால் ஜிடேனுக்கா வெற்றி? இல்லையே, அய்யோக்கியத்தனம் செய்து முட்டு வாங்கியவர்கள் வெற்றிகளிப்பில், அதே ஜிடேன் விதிகளின் படி அமைதியாக இருந்திருந்தால் வெற்றி பறிபோயிருக்காதே, இது தான் நேர்மையான ஆட்டத்தையும் தாண்டிய மொள்ளமாறித்தனம்.

உறுதிப்படாத ஒரு விடயத்தை வாதத்தில் வைப்பதையும் பெரும்பாலும் தவிர்ப்பேன், அப்படி ஒரு தகவலை வைக்கும் போது உதாரணமாக ஒருவரை பார்த்து நீங்கள் தான் இந்த பெயரில் பின்னூட்டமிடுகிறீர் என்று நான் கருதுகிறேன் என சந்தேகப்பட்டால் கூட போதும் மற்ற அனைத்து விவாதங்களும், கருத்துகளும், தவறுகளும் மறைக்கப்பட்டு இது மிகப்பெரிதாக பேசப்படும், எல்லா படங்களும் காட்சிகளும் அரங்கேறும், பிறகு மற்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இது மட்டுமே நிற்கும், ஆனாலும் பொதுமையில் இதை கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போலித்தனம் பல நேரங்களில் புரிவதில்லை, இந்த விடயத்தில் என் குரு சிம்ரன், அவரின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது அந்த தற்கொலையின் பின்னுள்ள நடன இயக்குனர், அவரின் தங்கை, மோனலின் காதலன், இதில் நடிக மும்தாஜின் பங்கு என பேட்டியில் பேசிய சிம்ரன் ஒரே ஒரு குற்றச்சாட்டாக மும்தாஜ் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மோனலின் வீட்டிலிருந்து திருடியதாக கூறிவிட்டார், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மிக அதிகமாக ஊடகங்களும் மும்தாஜீம் மற்றவர்களும் பேசியது ஐம்பதாயிரம் ரூபாய் விடயத்தை தான், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் மும்தாஜ் இதை செய்திருப்பாரா என்பதில் ஆரம்பித்து அத்தனை கவனமும் இதிலே தான் இருந்தது, இதில் சிம்ரன் அம்பலப்படுத்திய மற்ற அனைத்தும் மறைந்து விட்டன, ஏனெனில் ஆட்டவிதி அப்படி.

மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது, இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின் கோமாளித்தனத்தையும் மனம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம், விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, நல்ல வார்த்தைகளில் காழ்ப்புணர்ச்சியை துப்பினாலும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், எல்லாருடைய எழுத்துகளும் நிலைப்பாடுகளும் மற்றவர்களால் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள், எத்தனை போலித்தனத்தையும் அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லையென்றாலும் நாளாக நாளாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்போது சாயம் வெளுக்கும் அதுவரை முடிந்த அளவிற்கு அவர்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தாலே போதும்.

எல்லா மனிதர்களுக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்று ஒன்று உண்டு சிலருக்கு அது உடனே இருக்கும் சிலருக்கு கொஞ்சம் நேரம்பிடிக்கும்.

பண்பற்ற வார்த்தைகளினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனை சேதத்தை கருத்து தளத்தில் அவர்கள் விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்கின்றேன்.

பாவம் தமிழ்மண நிர்வாகிகள்

ஒரு குறிப்பிட்ட சாதியினரை மொத்தமாக வார்த்தைகளால் அவமதித்த விடாது கருப்பிவின் பதிவின் ஆட்சேபகரமான வார்த்தைகளுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

என்ன பாவம்யா செய்தாங்க தமிழ்மண நிர்வாகிகள், எதற்கெடுத்தாலும் அவர்கள் தலை உருள்கின்றது, விடாதுகருப்புவின் பதிவிற்கு மனவருத்தத்துடன் உஷா அவர்கள் எழுதிய பதிவில் பின்வருமாறு எழுதியுள்ளார் உஷா...

இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம் !

இதன் மூலம் தமிழ்மணத்தின் நிர்வாகிகள் பற்றி என்ன சொல்ல விழைகிறார்


ஏற்கனவே பலமுறை தமிழ்மண நிர்வாகிகள் விளக்கியும், ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால் அதை தமிழ்மணத்திற்கு தெரிவிக்க ஒவ்வொரு பதிவின் அருகிலும் முக்கோன வடிவில் இது மாதிரி இருக்கும், அதில் அழுத்தி பதிவு தொடர்பான கருத்துகளை ஆட்சேபங்களை தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம், அதன் பின் நியாயமான அவகாசம் அளித்து அதன் பிறகு கருத்து சொல்லலாம், நம்மை போலவே தமிழ்மண நிர்வாகிகளுக்கும் வேலை, தூக்கம், சாப்பாடு, குடும்பம், பொழுதுபோக்கு என அத்தனையும் இருக்கும் அவர்கள் 24 மணி நேரம் யார் என்ன பதிகின்றனர்? என்ன பின்னூட்டமிடுகின்றனர் என பார்க்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து தமிழ்மணத்தை குழப்பாதீர்கள், உஷா அவர் பதிவில் முதல் இருபத்திகளில் சொன்னது போல் நாம் எல்லோரும் தின்பது தமிழ்மண நிர்வாகிகளின் நேரத்தையும் உழைப்பையும்.

தமிழ்மணம் தொடர்பாக உஷா பதிவில் இட்ட பின்னூட்டங்கள்

//இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம்//

கடைசியாக ஒன்றே ஒன்று, நீங்கள் எழுதிய இந்த வரிகளை வைத்து, சந்தடி சாக்கில் தமிழ்மணம் மீது நீங்கள் சேறு வீசுவதாக கருத எனக்கு இடமுள்ளது எனொபதை

சே மனசு கேட்க மாட்டேங்குதே இருந்தாலும் இன்னொன்று, பதிவைப்பற்றி தமிழ்மண நிர்வாகத்திடம் கருத்து சொல்ல பதிவின் பக்கத்திலேயே ஒரு முக்கோணவடிவில் இருக்கின்றதே, அதை பயன்படுத்தி தமிழ்மண நிர்வாகிகளிடம் கூறினீர்களா? (அப்படி கூறியதாக உங்கள் பதிவில் எதுவும் இல்லை) அதை செய்து அதன் பிறகு ஒத்துக்கொள்ளத்தகுந்த அவகாசம் அளித்து பின் தமிழ்மணத்தை சந்திக்கு இழுத்திருக்கலாம்.... இத்தோட நான் முடிச்சிக்கிறேன், போற போக்கில் மூஞ்சில் துப்புபவர்கள் தாராளமாக துப்பலாம், அதான் ஏற்கனவே கெளம்பிட்டாங்களேங்குறிங்களா அதும் சரிதான்.

மற்ற என் பின்னூட்டங்களை இந்த பின்னூட்ட சேமிப்பு பதிவில் காணலாம்

புதுப்பேட்டை-பின் நவீனத்துவம்-சாரு

புதுப்பேட்டை பின் நவீனத்துவம் என்ற தலைப்பில் புதுப்பேட்டை படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன், கில்லியில் கூட கேட்டிருந்தார்கள் இந்தப் படத்துக்கும், பின் நவீனத்துவத்துக்கும் என்ன சம்மந்தம்? என்று சாருவின் புதுப்பேட்டை படத்தின் பதிவை படித்து பாருங்கள், படத்தில் சாரு ரசித்தவற்றில் பெரும்பாலானவற்றை நானும் ரசித்திருந்தாலும் அவர் எழுதிய அளவிற்கு முழுவதும் எழுதுவது அந்த நேரத்தில் முடியாததாலும், அப்போது முழுபடத்தையும் சொல்வதென்பதாலும் என்னால் முடியவில்லை, ஹீரோயிச போதையிலுள்ள தமிழ் திரைப்பட சூழலில் புதுப்பேட்டை போன்ற படங்கள் வருவது அபூர்வம்.

http://www.charuonline.com/kp216.html

காசு காஞ்சனா (தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா)


இன்றைய தினகரன் பத்திரிக்கையில் காசு காஞ்சனா என்ற தலைப்பில் "நாணயவியலில் ஆராய்ச்சி செய்யும் முதல் தமிழ் பெண் காஞ்சனாதேவி" என்ற அறிமுகத்தோடு "இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் பெண்கள் நுழையாத துறைகள் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன, அப்படியொரு துறைதான் நாணயவியல் ஆராய்சி,

முழு கட்டுரைக்கும் இந்த படத்தின் மேல் சுட்டவும்.


காஞ்சனா என் தங்கையின் தோழி, இவருடைய மற்றொரு தோழியும் தொல்பொருள் துறையில் முனைவர் பட்டத்திற்கு தங்கள் ஆராய்ச்சியை சமர்பித்துள்ளனர், இவர்கள் அனைவரும் வரலாறு முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

இன்றைய சமூக சூழலில் ஆண்களுக்கு மேல் படிப்பு சாதாரணம், ஆனால் பெண்களுக்கு மேலே படிப்பதே ஒரு சாதனை, அதிலும் சாதனை புரிந்த காஞ்சனா இந்த நிலைக்கு வருவதற்கு எத்தனையோ தடைகற்கள் ஆனால் அவை அனைத்தும் இன்று அவருக்கு படிகற்கள் ஆகிவிட்டன.

"தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா" என காஞ்சனா & தோழிகளின் ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் அவர்களின் கைய்ட், அவர்களுடைய கல்லூரி பேராசிரியை மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துகள்.

இந்தியாவின் புனித பசு (பாகம் - 1)

2003ல் ஜீலை 1, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர்த்து) தங்களது வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர், இதற்கு பல மாதங்களுக்கு முன்பே பறிக்கப்பட்ட பல சலுகைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அரசின் அலட்சியத்தாலும் வேலை நிறுத்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டும் அரசு கண்டுகொள்ளாததாலும் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்


ஈட்டியவிடுப்பு குறைப்பு, முழு ஓய்வூதியம் கிடைக்க வேலை செய்திருக்க வேண்டிய ஆண்டுகள் அதிகரிப்பு, பி.எஃப் மற்றும் கிராஜிவிட்டி பாதி மட்டுமே ஓய்வு பெறும் போது பணமாக தரப்படும், மீதி ஆறாண்டு காலத்திற்கான பத்திரமாக தரப்பட்டதை (செத்த பிறகு பாலூற்ற இந்த பத்திரங்கள் பயன்படலாம்) மீண்டும் பணமாக வழங்க சொன்னது, அரசாங்க வேலைக்கு பணியமர்த்துதலை நிறுத்தி வைத்ததை திரும்ப பெற வலியுறுத்தல் என்பன அவர்களின் கோரிக்கைகளில் சில ஆனால் இவர்கள் சம்பள உயர்வு எதுவும் கேட்கவில்லை.

சமூகநீதிக்காக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக பிற்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்த மத்திய அரசை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கழகத்தின் (AIMS) அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு கூட வாய்ப்பளிக்காமல் நேரமளிக்காமல் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் (தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் வேலை நிறுத்தத்தில் இறங்காதவர்கள் மருத்துவர்கள், இங்கேயோ வேலைநிறுத்தத்தில் இறங்கிய ஒரே ஆட்கள் மருத்துவர்கள்) தமது பணி, ஊதியத்தில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத போதும் அரசாங்கம் கொண்டுவந்த இடஒதுக்கீட்டை ஆதிக்க சாதிவெறி ஏறி எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்

நீதிபதி கற்பக வினாயகத்தின் அரசாங்க நடவடிக்கைக்கான இடைக்காலத்தடையை சில மணிநேரங்களில் உயர்நீதிமன்ற பெஞ்ச் ரத்து செய்தது மட்டுமல்லாமல் முதலில் உடனடியாக வேலைக்கு செல்லுங்கள், வேலைக்கு செல்லாமல் எதை பேசவும் உரிமையில்லை, பணி நீக்கம், இடை நீக்கம் நடவடிக்கை அனைத்தையும் பிறகு பேசலாம் என மாதசம்பளக்கார அரசு ஊழியர்களை இடித்துரைத்து உடனடியாக பணிக்கு செல்ல ஆணையிட்டது.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் இந்த சுட்டியில், அதிலிருந்து சில பகுதிகள்
(A) There is no fundamental right to go on strike:--
Law on this subject is well settled and it has been repeatedly held by this Court that the employees have no fundamental right to resort to strike.
(B) There is no legal / statutory right to go on strike. There is no statutory provision empowering the employees to go on strike.
(C) There is no moral or equitable justification to go on strike. Apart from statutory rights, Government employees cannot claim that they can take the society at ransom by going on strike. Even if there is injustice to some extent, as presumed by such employees, in a democratic welfare State, they have to resort to the machinery provided under different statutory provisions for redressal of their grievances. Strike as a weapon is mostly misused which results in chaos and total maladministration. In case of strike by Doctors, innocent patients suffer;

We agree with the said submission. In the prevailing situation, apart from being conscious of rights, we have to be fully aware of our duties, responsibilities and effective methods for discharging the same. For redressing their grievances, instead of going on strike, if employees do some more work honestly, diligently and efficiently, such gesture would not only be appreciated by the authority but also by people at large. The reason being, in a democracy even though they are Government employees, they are part and parcel of governing body and owe duty to the Society.

2. This reinstatement in service would be subject to unconditional apology as well as undertaking to the effect that employees would abide by Rule 22 of the Tamil Nadu Government Servants Conduct Rules 1973 which provides as under: -"22. Strikes: No Government servant shall engage himself in strike or in incitements thereto or in similar activities."
3. It is also stated that Government will proceed under the Disciplinary Rules only against those employees who had indulged in violence and who had incited the other employees to go on strike.

We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.

அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மருத்துவர்களுக்கு வேண்டுகோள்/ஆணையிட்ட உச்ச நீதிமன்றம் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மருத்துவர்கள், மாணவர்கள் மீது எடுக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

The court had also assured the medicos that the Government would not take any action against them for acts done during the course of the strike.
A vacation bench comprising Justice Arijit Pasayat and Justice L S Panta said if the strike is called off, the government should appropriately consider the feelings of students and not take any punitive action.

தமிழக அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப ஆணையிடப்பட்டது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மூன்று நாள் வழங்கப்பட்டது.

The Court said the government shall recall the doctors whose services were terminated during the agitation and they should be given three days time to join work.

தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்ட சமயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த தகவல் கீழே, அதன் படி வேலை நிறுத்த காலம் சம்பளமில்லா விடுப்பு காலமாக கருதப்படும்(அதாவது No work, No Pay)
"A submission has been made by the State Government among other things in the Apex Court that for the employees who would be reinstated in service, the period of absence will not be treated as break in service. But the treatment of period of absence up to July 24, 2003, as leave on loss of pay in respect of all employees and subsequent periods in respect of all employees who do not possess leave at credit runs counter to the above submission as leave and loss of pay will not count for the purpose of qualifying service under Pension Rules and is deducted from the qualifying service for pension," it said.

06 ஜீலை 2006 அன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்திபடி
போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்ற உத்தரவு நீதிபதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, மத்திய அரசு இது போல் செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அரசு ஒரு முன்மாதிரி முதலாளி போல் செயல்பட வேண்டும் என்று கூறுங்கள் என்று கடுமையாக கண்டிக்கும் வகையில் பேசினார்.

தமிழக அரசு ஊழியர்களின் போராட்ட மற்றும் பணி நீக்க காலங்களில் 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர், ஒன்பது நடத்தை விதிகளை மீறியதாக அகில இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் பதவியிலிருந்து வேணுகோபாலை 17 பேர் அடங்கிய எய்ம்ஸ் நிர்வாக குழுவில் 14 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, வேணுகோபாலின் பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி In case of strike by Doctors, innocent patients suffer; என்று உச்ச நீதிமன்றம் கருதும் மருத்துவர்கள் செய்த வேலைநிறுத்தத்தினால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தார்.

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது கீழே

We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.

கடைசி செய்தியாக வேணுகோபாலின் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழுவிபரம் இந்த சுட்டியில்.

வாழ்க சம நீதி, வாழ்க சமூக நீதி

References

http://judis.nic.in/supremecourt/
qrydisp.asp?tfnm=19215

http://www.dinamalar.com/
2006july06/fpnews3.asp

http://www.tribuneindia.com/
2003/20030807/main1.htm

http://www.hindu.com/
2004/07/02/stories/2004070205190400.htm

http://in.rediff.com/news/quota06.html
http://in.rediff.com/news/2006/may/31quota1.htm
http://www.hindustantimes.com/
news/181_1710133,001302220000.htm

http://www.rediff.com/news/2003/aug/06sc.htm
http://pd.cpim.org/2004/1107/11072004_ardhendu%20dakshi.htm
http://www.rediff.com/news/2003/jul/21tn.htm?zcc=rl
http://www.indianexpress.com/sunday/
fullcoverage/38.html

http://www.indianexpress.com/sunday/story/7261.html
http://www.deccanherald.com/deccanherald/
aug07/i1.asp

http://www.hinduonnet.com/
fline/fl2104/stories/20040227004202600.htm

http://www.hinduonnet.com/
fline/fl2015/stories/20030801004201500.htm

http://www.indianexpress.com/sunday/story/7975.html
http://www.newkerala.com/news3.php?action=fullnews&id=18327

சிலையரசியலில் எழுத்தாளர் ஞானியும் கலைஞர் கருணாநிதியும்

சிலை என்பது சிலரின் நம்பிக்கை, சிலரின் பெருமிதம், சிலரின் வெற்றி, சிலரின் குதூகலம், சிலரின் துயரம், சிலரின் வெட்கம், சிலரின் தோல்வி ஆதலால்தான் சிலைகள் கூட பெரும் கலவரத்தை உண்டு செய்கின்றன ஆதலால் சிலை என்பது வெறும் சிலையல்ல, கடவுள் பற்றிய எந்த சந்தேகமும், எந்த விமர்சனமும் அற்ற காலம் அது, கடவுள் பற்றிய சந்தேகம் வந்தாலும் கூட கடவுள் கண்ணை குத்தி விடுவாரோ என்ற அளவிற்கு நம்பிக்கை இருந்த காலத்தில் பெரியார் கடவுள் சிலையை உடைத்தார், அந்த சிலை உடைப்பு வெறும் சிலை உடைப்பு அல்ல, அந்த சிலை உருவாக்கியிருந்த நம்பிக்கையை உடைப்பது, இங்கே பார் உன் புனிதம் இங்கே உடைக்கப்படுகிறது, உடைக்கப்பட முடியாத உடைக்க கூடாத புனிதமல்ல கடவுள், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல கடவுளும் மதமும் என்ற அதிர்ச்சியை உருவாக்கியது பெரியாரின் சிலைஉடைப்பு.

அம்பேத்கார் சிலையை அவமதிப்பவர்கள் வெறும் சிலையென்று அவமதிப்பதில்லை, அதன் மூலம் தலித் இனத்தையே அவமதித்து விட்டதாக கருதுகின்றனர், அம்பேத்கார் சிலையை பார்க்கும் போதெல்லாம் அம்பேத்காரோடு சேர்ந்து தலித்கள் நினைவுக்கு வருவர், தலித்கள் நினைவுக்கு வரும்போது அவர்களின் அடிமைக்காலம் நினைவுக்கு வரும், கூடவே சேர்ந்து அவர்களின் அடிமைத்தனத்திற்கான இன்றைய எதிர்ப்பும் நினைவுக்கு வரும் அந்த நினைப்பு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு வருத்தமாகவும் இருக்கும்.



கண்ணகி சிலையும் இது போன்றதே, கண்ணகியை பிரிந்து மாதவியுடன் இருக்கும் கோவலன் திரும்பி வர வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் கண்ணகி அல்ல சிலையாக, முற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை விரட்ட தங்கத்தாலான தம் காதணியை கழற்றி வீசும் பணக்கார வணிக குலப்பிறப்பான கண்ணகி அல்ல சிலையாக, பின் யாரங்கே சிலையாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து விரிந்த தலையுடன், கையில் சிலம்புடன், மாபெரும் வல்லமை கொண்ட பாண்டிய பேரரசனை எதிர்த்து "தேரா மன்னா! செப்புவது உடையேன்!" என குரல் கொடுத்தாளே அந்த கண்ணகி தான் இருக்கிறாள் சிலையாக, எத்தனை வலிமை கொண்ட அரசானாலும் அரசனானாலும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற தோன்றும் அந்த சிலையை பார்க்கும் போது, பெரும் சிந்தனையாளராக கருதப்படும் ஞானிக்கு இந்த தலைவிரி கோல கண்ணகி நினைவு படுத்தும் செய்தி புரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

எத்தனையோ இலட்சம் மக்கள் முகமூடியில்லாமல் இருக்கும் பெங்களூரிலே திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் சாக்கும் முகமூடி ஏன்? திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டால் அங்கே தமிழர்களின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டதாகிவிடும், கன்னட தலைநகரிலே தமிழனின் சிலையென்றால் அது தமிழர்களின் வெற்றியாகவும் கன்னடர்களின் தோல்வியென்றும் சி(ப)லர் கருதுகின்றனர், அதனாலேயே பல கன்னட அமைப்புகளின் எதிர்ப்பால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க இயலவில்லை.

கோபத்துடன் அரசிடம் நீதி கேட்கும் கண்ணகி சிலை சோதிடப்படி ஆபத்து என்று எடுக்கப்பட்டிருந்தாலும், வேறு எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டிருந்தாலும் அதே இடத்தில் அந்த சிலை மீண்டும் நிறுவப்படுவதன் மூலம், சோசியப்படி சிலை எடுக்கப்பட்டிருந்தால் சிலையினால் அரசுக்கு ஆபத்து என்ற கருத்திற்கு அடி கொடுப்பதும், மீண்டும் சிலையை நிறுவுவதன் மூலம் தமிழ் உணர்வுக்கு சற்று உயிர் கொடுப்பதாகவும் அமையும், இது தவிர ஜெயலலிதா எடுத்த சிலையை கருணாநிதி மீண்டும் நிறுவுவதன் மூலம் தன் அதிகாரத்தை காண்பிக்க முதல்வர் கருணாநிதி விரும்பியிருக்கலாம்.


'சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய 'டெடி பேர்' கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்' என்பதுதான் நான் விகடனில் எழுதிய வாக்கியம். இதற்கு அர்த்தம் என்ன? பொம்மைக்கான வயது கடந்தபிறகும் அதைக் கொஞ்சுகிறவரின் முதிர்ச்சியற்ற (அப்செஷன்) மனநிலையையும் ஆட்சியாளரின் மனநிலையையும்தான் அது ஒப்பிடுகிறதே தவிர பொம்மையையும் சிலையையும் அல்ல என்று கூறிய ஞானி இரண்டு வரிகளில் திமுகவின் வளர்ச்சியையும் அதன் வரலாற்றையும் கருணாநிதியையும் கொச்சை படுத்தி பார்க்கிறார் எனலாம், கண்ணகி சிலை என்பது வெறும் சிலையல்ல, அதன் பின் உள்ளது தமிழ் உணர்வு, இந்த உணர்வின் வெளிப்பாடே இந்தி மேலாதிக்க எதிர்ப்பின் காரணம், இந்த தமிழ் உணர்வை திமுக தன்னை வளர்த்து கொள்ள கரடி பொம்மை மாதிரி பயன் படுத்தியுள்ளது அதான் இப்போது வளர்ந்துவிட்டதல்லாவா இன்னமும் எதற்கு அந்த தமிழ் உணர்வை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறாய் என்பது ஞாநியின் வரிகளின் சாராம்சம், ஞானி கரடி பொம்மை என்றது கண்ணகி சிலையை அல்ல, கண்ணகி சிலையின் பின் உள்ள தமிழ் உணர்வை, கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்படுவதன் மூலம் வெளிக்காட்டும் அதிகார நிறுவலை.


"தொல்காப்பியம் முதல் பாசக்கிளிகள் வரை பலதரப்பட்ட இலக்கிய அறிவுடைய கலைஞருக்கு இந்த உவமையின் பொருள் புரியாதா என்ன?" என்று கேட்டுள்ளார் 'ஓ' போடு ஞானி, ஆனால் அந்த வரிகளின் பின்னுள்ள விசமத்தையும் புரிந்துதான் பாய்ந்துள்ளார் கருணாநிதி.

உண்மையில் சமமில்லாத திமுகவையும் அதிமுகவையும் (அல்லது அரசியல் கட்சிகளையும்) இரண்டும் ஒன்றுதான்,எல்லா கட்சியும் மோசம்தான் என்பது, மிக மோசமான கட்சிக்கு சாதகமாக அமையும், ஞானி தேர்தல் சமயத்தில் 'ஓ' போடுங்க 'ஓ' போடுங்க என்றதன் மூலம் திமுகவை அதிமுகவிற்கு நிகரான மோசமான கட்சி என்று உருவகப்படுத்தினார், நிச்சயம் இது மிக மோசமான கட்சிக்கே சாதகம் 'ஓ' போடுவதில் உள்ள நடைமுறை சிக்கலால் திமுகவா? அதிமுகவா? என்ற ஒப்பீட்டில் திமுகவிற்கு சாதகமான வாக்குகள் மூன்றாவதாக ஒரு கட்சிக்கு சேர்ந்திருக்கும், ஞானி போட்ட 'ஓ' வும் சேர்ந்து கருணாநிதியை சீற வைத்திருக்கலாம்.

ஞானியின் இந்த அரசியல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி எதிர்க்காமல் கண்ணகிசிலையும் கரடி பொம்மையும் ஒப்பீடு என்ற அளவில் சீறிய கருணாநிதி மற்றும் அதை தொடர்ந்து நடந்த விகடன் பத்திரிக்கை எதிர்ப்பு போராட்டம் என்பதெல்லாம் ஞானியின் அரசியல் வெளித்தெரியாமல் போய்விடும் என்பதோடு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதில் உள்ள வித்தியாசம் குறைந்து வருவதையும் காண்பிக்கின்றது.